செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள், இதயதுல்லா - தாஹிதா பேகம். இஸ்லாமியத் தம்பதியரான இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் 5 வயது நிரம்பிய இரண்டாவது குழந்தை ஹேனா, கிருஷ்ண ஜெயந்தியான இன்று டிவியில் சுட்டிக் கிருஷ்ணரை பற்றிய நிகழ்வுகளைப் பார்த்து விட்டு, பெற்றோரிடம் கிருஷ்ணர் வேடமிடுமாறு ஆசையாய் கேட்டுள்ளார்.
பெற்றோர்களும் தாங்கள் இஸ்லாமியர்களாய் இருந்தாலும் மதங்களைக்கடந்து பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்றுவது என முடிவெடுத்து தாம்பரம் சந்தைக்குச்சென்று கிருஷ்ணர் வேடமிடத் தேவையான மயில் இறகு, புல்லாங்குழல், சிறிய பானை, ஆடை, என அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்து, அலங்காரப்பொருட்களை வைத்து, கிருஷ்ணர் வேடமிட்டு தெருவில் நடக்கவிட்டு மகிழ்ந்தனர்.
மனிதர்கள் மதங்களை தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில், குழந்தையின் ஆசையை, மதங்களைக் கடந்து சாத்தியப்படுத்திய இஸ்லாமிய தம்பதிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத்தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:25 லட்ச ரூபாயில் கிருஷ்ணருக்கு தொட்டில் செய்த பக்தர்கள்