சென்னை: சென்னை பாடி தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கீதா. கணவர் உயிரிழந்த நிலையில், தனது பகுதியில் உள்ள பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கீதா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் பாஜகவில் பொறுப்பில் இருக்கும் நடிகை ஜெயலட்சுமி, அவரது மகள் அனகா, அவரது வழக்கறிஞர் என தங்கள் சுய உதவிக் குழுவில் உள்ள 9 பேருக்கும் கந்துவட்டிக் கொடுமை அளித்து மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கீதா, "தேர்தல் நேரத்தில் எங்கள் குழுவுக்கு அறிமுகமான நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி மூலம் லோன் வாங்கித் தருவதாகக் கூறி 7 பெண்களுக்கு 1 லட்சம் ரூபாயும், 2 பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பெற்றுத்தந்தார். அதற்கு எங்களிடம் இருந்து கையொப்பமிட்ட வெற்று காசாலை, கையொப்பமிட்ட வெற்று ஸ்டாம்ப், பேப்பர் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.

ஜெயலட்சுமி உறுதி
மேலும், இந்த கணக்கு வழக்குகளை ஜெயலட்சுமியின் மகள் அனகா, வழக்கறிஞர் என எங்களுக்கு அறிமுகமான சார்லஸ், அலெக்ஸாண்டர் ஆகியோர் பார்த்து வந்தனர். எங்களால், 10 பைசா வட்டி செலுத்த முடியாது எனக்கூறியபோது, இயன்றதை கட்டி சிறிது சிறிதாக நீங்கள் வாங்கிய அசலை அடைத்துக்கொள்ளுங்கள் என ஜெயலட்சுமி கூறியதை நம்பி மாதமாதம் நாங்கள் பெற்ற கடனுக்கு ஈடான தொகைய வங்கியில் செலுத்தி முடித்துவிட்டோம்.
மிரட்டல்
தற்போது, நடிகை ஜெயலட்சுமி, சார்லஸ் ஆகியோர் இதுவரை நீங்கள் செலுத்திய பணம் அனைத்தும் வட்டிக்குத்தான் சென்றுள்ளது. அசல் இன்னும் அப்படியே உள்ளது எனக்கூறி தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர். நள்ளிரவு நேரங்களிலும், அவர்கள் வீட்டிற்கு நேரடியாக வந்தும், தொலைபேசி மூலம் அழைத்தும் மிரட்டுகின்றனர்.

எங்களை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு கந்துவட்டி கொடுமை செய்யும் அந்த மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடியோ: நடனமாடியபடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த இளைஞர்!