திரைப்படங்களில் இடதுசாரி சிந்தனையை ஒட்டியவராக, பகுத்தறிவு பாதையில் நடைபோடுபவராக ஒரு வெள்ளித்திரை பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்ட கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தில் மைய அரசியலை நோக்கி செயல்பட்டு வருகிறார். தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு அனைத்து மாவட்டத்துக்கும் நேரில் சென்று பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
பல இடங்களில் கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்வி: மக்கள் நீதி மய்யம் எந்தச் சித்தாந்தம் கொண்ட கட்சி என்பதே. அப்போது, மக்கள் நீதி மய்யம் இடது சாரியும் இல்லை; வலது சாரியும் இல்லை; நங்கள் மைய அரசியலில் ஈடுபடுவோம் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில், மைய அரசியலின் தூணாக இருந்த காங்கிரஸ், வலுவிழந்து இருக்கும் நிலையில், அந்த அரசியல் தளத்தை குறிவைத்திருப்பது பழம்பெரும் தேசியக் கட்சிக்குச் சவாலாக இருக்குமா?
திரை பிம்பமும் நிஜ அரசியலும்:
முற்போக்கு சிந்தனை உடைய, பழமைவாதத்திற்கு எதிரான நவீன நாயகனாக, திரைப்படங்களில் கமல்ஹாசனை நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த பிம்பத்தின் நீட்சியாக, தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் 3.7% வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் பெற்றது.
'14 மாத குழந்தையை மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். இது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது', என அப்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் அரசியல் வருகை மற்றும் அவர் முன்வைக்கும், ஊழலுக்கு எதிரான, நேர்மையான ஆட்சி என்பது சித்தாந்த சிக்கலற்றது. திராவிட கட்சிகள் இன-மொழி உரிமையை முன்னிறுத்துவதற்கும் பாஜக முன்வைக்கும் இந்துத்துவாவிற்கும் மாற்றானது.
மைய அரசியல்:
இந்த மைய அரசியல், தேசிய எண்ணம் கொண்ட வாக்காளர்களையும், மத்தியவர்க்கத்தினரையும் (தேசிய கட்சிகளுக்கு வாக்கு வங்கி) தன் பக்கம் ஈர்க்கும் யுக்தியாகும். 'மைய அரசியல்' என்பது இடது மற்றும் வலது சாரி கொள்கைகளை பின்பற்றாமல் நடுநிலைமையாக (Centrist) நின்று இரண்டிலும் உள்ள நன்மைகளை உள்வாங்கி ஏற்றுக்கொண்டு அரசியல் களத்தில் செயல்படுவதே ஆகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைலும் காங்கிரஸ் மைய அரசியலில் ஈடுபட்டு வருகிறது என்று கூறலாம். அதற்கு பிறகு தற்போது மக்கள் நீதி மய்யம், மைய அரசியலில் களமிறங்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு விழுக்காடு குறைந்து கொண்டே வருகிறது. அந்த சித்தாந்தத்தை அடியொற்றிய மக்கள் நீதி மய்யம் எந்த அளவு, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்றாம் சக்தியாக இருந்து, தற்போது தேய்ந்து பின்தங்கியுள்ள காங்கிரஸுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் எழுந்து வருமா என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டில் கூடியுள்ளது.
![மைய அரசியல் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் Central politics Centrism Makkal Neethi Maiyam Kamalhasan Kamalhasan Political Idealiogy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10134920_che1-2.jpeg)
மைய அரசியல் காலத்தின் கட்டாயம்:
எந்த ஒரு சித்தாந்தத்தின் பிடியிலும் இல்லாமல், முற்போக்கு அரசியலை முன்னெடுக்க முடியும் என்பதற்கு மக்கள் நீதி மய்யம், மீண்டும் ஒரு பாதை வகுத்துள்ளது என அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். "சித்தாந்தம் சார்ந்த கட்சிகளால், ஆட்சிக்கு வந்த பின்னர் சில திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆனால், நடுநிலை அரசியல் சார்ந்த கட்சிக்கு அத்தகைய தடை ஏதுமில்லை, மக்கள் நலனே முக்கியம். மேலும், மக்கள் யாரும் தற்போது சித்தாந்தத்தைப் பார்த்து வாக்கு அளிப்பதில்லை. தலைமை வழிபாடு வைத்தே வாக்கு அளித்து வருகின்றனர். வழிகாட்டும் தலைமை எங்களுக்கு உண்டு. காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் சித்தாந்தம் நன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தலைமை மற்றும் வழிநடத்துவது சரியாக இல்லை. இதுவே அதன் பின்னடைவுக்குக் காரணம்," என மக்கள் நீதி மய்ய செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்னரே மைய அரசியல்:
அரசியல் நோக்கர்களின் பார்வையில், கமல் செய்வது 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற அளவில் தான் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் மைய அரசியல் என்பது 50 ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது என ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் நோக்கர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "50 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக வெளியிட்ட திட்டம் கிட்டத்தட்ட மைய அரசியல் போல் தான் இருந்தது என அப்போதே அனைவரும் கூறினார்கள். தீவிர இடது சாரியோ மற்றும் தீவிர வலது சாரியோ தமிழ்நாட்டில் வெற்றி பெறாது. நடுநிலை அரசியல் மட்டுமே தமிழ்நாட்டில் வெற்றி பெரும். எனவே, மைய அரசியல் முதலில் திமுகவை அடுத்து அதிமுக என 50 ஆண்டுகளுக்கு முன்னரே நடுநிலை அரசியல் வந்துவிட்டது. தற்போது கமல்ஹாசன் நடுநிலை அரசியல் செய்யப்போகிறேன் என்கிறார். ஆனால், அது ஏற்கெனவே வந்துவிட்டது. நடுநிலை அரசியலில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தான் கேள்வி.
![https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10134920_che1-3.jpeg](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10134920_che1-3.jpeg)
காங்கிரஸ் இடத்தை நிரப்புவது கடினம்:
நடுநிலை அரசியல் மூலம், தேசிய கட்சியான காங்கிரஸின் இடத்தை எட்டுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை, அதற்கான அரசியல் சூழலும் உருவாகவில்லை. எனவே, தற்போதைக்கு இந்த நடுநிலை அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. அதற்கு இன்னும் காலம் எடுக்கும். காங்கிரஸைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொரு கிராமத்திலும் யாராவது இருப்பார்கள். எனவே, காங்கிரஸ் இடத்தை நிரப்புவது கடினம். புது வாக்காளர், நகர்ப் புற வாக்காளர்கள், கமல்ஹாசன் வேட்பாளர் என இவைகள் மட்டுமே கமல்ஹாசன் வாக்கு விழுக்காடாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில், கூடுதல் வாக்குகள்பெற்று மநீம வளர்ச்சி அடைந்தால், மூன்றாம் அரசியல் சக்தியாக கமல் உருவெடுக்க வாய்ப்புள்ளது. அது வாக்காளர்களின் கையில் இருக்கிறது.
![மைய அரசியல் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் Central politics Centrism Makkal Neethi Maiyam Kamalhasan Kamalhasan Political Idealiogy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10134920_che1-1.jpeg)
இதையும் படிங்க: இந்தியாவின் தலைவாசலாக தமிழ்நாடு மாறும் - தர்மபுரியில் கமல்ஹாசன் பேச்சு