சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது நிதி அமைச்சருக்கு வன்மம் உள்ளதாகவும், அவர்கள் மீதுள்ள வன்மத்தை ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளிக்காட்டியுள்ளார் என்றும் ஜாக்டோ ஜியோ குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றுக் கொண்டு, முதல் நிதிநிலை அறிக்கையினை கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்தது.
பெரும் ஏமாற்றம்
இந்நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்ததற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நன்றியினை உரித்தாக்குகிறது.
மத்திய அரசு அறிவித்த 11 விழுக்காடு அகவிலைப்படியினை, நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், அரசின் தொற்று நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, களப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 1-4-2022 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
![jacto geo statement against finance minister jacto geo jacto geo statement finance minister finance minister ptr palanivel thiyagarajan budget நிதிநிலை அறிக்கை அகவிலைப்படி ஜாக்டோ ஜியோ நிதி அமைச்சர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜாக்டோ ஜியோ நிதி அமைச்சருக்கு எதிராக அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12862254_statement1.png)
தவறான புள்ளிவிவரம்
நிதியமைச்சர் நேற்றைய தினம் (ஆக 23) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மிகவும் துச்சமென மதித்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் அந்நியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
மேலும், நிதிநிலை அறிக்கையில், ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்தார்.
ஆனால் தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம், ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்து பொதுமக்களிடத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின்பால் பகைமை உணர்வை வளர்க்கும் தவறான புள்ளிவிவரத்தினைப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து கரோனா நோய்த் தொற்றினை எதிர்கொள்வதற்காக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.150 கோடியினை இரண்டு முறை வழங்கியதை மறந்துவிட்டு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது அமைச்சருக்கு இருக்கின்ற வன்மத்தை வெளிக்காட்டியுள்ளார்.
![jacto geo statement against finance minister jacto geo jacto geo statement finance minister finance minister ptr palanivel thiyagarajan budget நிதிநிலை அறிக்கை அகவிலைப்படி ஜாக்டோ ஜியோ நிதி அமைச்சர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜாக்டோ ஜியோ நிதி அமைச்சருக்கு எதிராக அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12862254_statement2.png)
வாக்கினை நம்பி களப்பணி
மத்திய அரசு கரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி, ஜனவரி 2020 முதல் 18 மாதங்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படியினை நிறுத்தி வைத்தது.
முந்தைய அதிமுக ஆட்சியும் மத்திய அரசினைப் பின்பற்றி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 18 மாதங்கள் முடக்கி வைத்தபோது, அரசின் முடிவுக்கு எதிராக குரல்கொடுத்து, அகவிலைப்படியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தற்போதைய முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டதை நினைவு கூறுகிறோம்.
மேலும், ஜாக்டோ - ஜியோ போராட்டக் களத்திற்கு வந்து உறுதியளித்ததற்கு வலு சேர்க்கும் விதமாக, திமுக தேர்தல் அறிக்கையில் "திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றது.
இந்த வாக்குறுதியானது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றால், ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால்தான் சாத்தியமாகும் என்பதை அன்றைக்கே உணர்ந்து, கடுமையான களப்பணியாற்றினோம்.
முதலமைச்சர் மீது நம்பிக்கை
கடந்த மே 7ஆம் தேதி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட தருணத்திலிருந்தே, தேர்தலின்போது தமிழ்நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியதைக் கண்டதும், நமது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டது.
ஆனால், நிதியமைச்சர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, மக்கள் மத்தியில் பகைமை உணர்வை வளர்க்கும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
இப்போக்கானது, அரசிற்கும் ஆசிரியர், அரசு ஊழியரிடையே, காலங்காலமாக இருந்த நல்லுறவினை பேணிப் பாதுகாத்து வரும் திமுகவின் ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கருதுகிறது.
![jacto geo statement against finance minister jacto geo jacto geo statement finance minister finance minister ptr palanivel thiyagarajan budget நிதிநிலை அறிக்கை அகவிலைப்படி ஜாக்டோ ஜியோ நிதி அமைச்சர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜாக்டோ ஜியோ நிதி அமைச்சருக்கு எதிராக அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12862254_statement3.png)
முதலமைச்சர் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல், 11 விழுக்காடு அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் அரசுக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் இடையே இருந்த நல்லுறவினை மீட்டெடுக்கும் வகையில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசவேண்டும்” என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?