சென்னை: இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்றது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி 'விஜய் திவாஸ்' இந்தியா- பாகிஸ்தான் போரில் சுமார் 93 ஆயிரம் ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர்.
13 நாள்கள் நடந்த கடுமையான போரின் முடிவில் வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற்று தனி நாடானது. இந்த வரலாற்றின் 50ஆம் ஆண்டு பொன்விழா நாளை (டிசம்பர் 16) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து தீவுத்திடலில் உள்ள தக்க்ஷின் பாரத் தலைமையகத்தில் ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ. அருண் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ் ஊடகம் மிகச் சரியான வகையில் செய்தியை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் போரின் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் நாளை டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
4 நாள்கள் திறப்பு
அதேபோல் சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்திலும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்குப் பின் நாளை காலை 10 மணி முதல் 19ஆம் தேதி மாலை 5 மணி வரை போர் நினைவுச் சின்னம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம். செல்ஃபி எடுத்துக்கொள்ள போர் நினைவுச் சின்னத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள பொன்விழா நிகழ்ச்சியில் இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட வீரர்கள் சிறப்பிக்கப்படவுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: வருண் சிங் காலமானார்!