மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை யாருக்கும் ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது ஜெயலலிதாவின் சகோதரர் மகனான தீபக், தன்னை நிர்வாகியாக நியமிக்க கோரி தாக்கல் செய்த மனுவை, இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,தீபத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும், இந்த வழக்குடன் விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தனர்.
மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான நிலைப்பாட்டை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.