மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி டோல்கேட் ஊழியர்களுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காரில் வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவம் தொடர்பாக தனசேகரன், ராஜா, ஹரிகிருஷ்ணன், சசிக்குமார் உள்ளிட்ட பலரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பலர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சசிக்குமாரின் அக்கா தனலட்சுமி, தன் சகோதரர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, "பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் உள்ளதைப் போன்ற துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. அதனடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல" என்றனர்.
அப்போது, மனுதாரர் தரப்பில் கால மனு குறித்து வாதம் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.