சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், செங்கல்பட்டு அருகில் கருங்குழிபள்ளம் எனும் கிராமத்திலுள்ள 105 ஏக்கர் அரசு நிலம் 53 தனி நபர்களுக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நில அபகரிப்பு குறித்து டிஜிபியிடம் புகார் அளித்தபோது, அப்புகாரை நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவுக்கு அனுப்பாமல், திருப்போரூர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை சட்டவிரோதமாக கையாளும் விவகாரத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தமும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள மனுதாரர், தனது புகாரின் அடிப்படையில் காவல் துறை உரிய பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், நில அபகரிப்பு புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தமிழ்நாடு டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தவறாக வழங்கப்பட்ட இந்த பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 105 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு தவறுதலாக பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.