சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது.
டெண்டர் இன்று (பிப். 24) நடைபெற உள்ள நிலையில் இதற்குத் தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடியில் தனியார் நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 2 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாள்கள் வழங்க வேண்டும் என டெண்டர் வெளிப்படைச் சட்டத்தில் விதி உள்ளது.
ஆனால், 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டருக்கு 15 நாள்கள் மட்டுமே தரப்பட்டதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் டெண்டர் எடுக்கும் வகையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விதிகளை மாற்றியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க இயலாத வகையிலும், அதேசமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்களைப் பங்கேற்கும் வகையிலும் வெளியிடப்பட்டதாகும், மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள காரணத்தினால் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், மேலும் 15 நாள்கள் கால அவகாசம் நீட்டிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கேட்கப்பட்டதாகத் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் வழக்குத் தொடர எந்தத் தகுதியும் இல்லை என்றும், அவர் பொதுநல வழக்குதான் தொட முடியும் என்றும் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், டெண்டர் நிபந்தனைகளில் விதிமுறைகள் மீறல் இருப்பதாகவும், அதை எதிர்த்துதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். தங்கள் நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கவே இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று (பிப். 24) உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும், அதுவரை டெண்டரை திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.