தேனி: 2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அதிமுகவிற்கு வாழ்வு என்று கூறியுள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "அதிமுக இயக்கத்தை உருவாக்கி, அதனை கட்டிகாக்க, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டு காலமாக பாடுபட்டனர். கட்சியின் விதிமுறைகள்படி தேர்தல் மூலமாக தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். இந்த விதியை யாராலும் திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியில் திருத்தம் மேற்கொண்டார். அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம்தான் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ளது." என்று ஓபிஎஸ் கூறினார்.
மேலும் பேசிய அவர், "அத்திக்கடவு -அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தியதால் மாநில அரசின் நிதியின் மூலம் அத்திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். நானும் செங்கோட்டையனும் இணைந்து பல மாநாடுகளை முன்னின்று நடத்தியுள்ளோம். இதுகுறித்த எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன் தான்." என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி - கமல்ஹாசன் சந்திப்பு: "அன்பும், நன்றியும்..." என துணை முதலமைச்சர் பதிவு! - UDAY KAMAL MEETING
அத்துடன், "நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாழ்வு. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தால்தான் அனைவருக்கும் நல்லது."
த.வெ.க தலைவர் விஜய் அரசியலில் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." என்று ஓபிஎஸ் கூறினார்.
அப்போது பஞ்சமி நிலம் வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "தேனி அல்லிநகரத்தில் கடந்த 1937 ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவரின் பூர்வீக நிலம் எந்தவித வகைப்பாட்டின் கீழும் கொண்டு வரப்படாமல் இருந்தது. அதன்பின் 1984 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தினை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சுப்புராஜ் என்பவரிடம் இருந்து நான் நிலத்தை வாங்கினேன். பின்னர் அது பஞ்சமி நிலம் என்று தெரிய வந்ததால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்துவிட்டேன்." என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.