சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, சிவகங்கையைச் சேர்ந்த காா்த்திக்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்மலன், தூத்துக்குடியை சேர்ந்த சேக்முகமது ஆகிய நால்வரும் மீனவர்கள்.
இவர்கள் 4 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் மீன் பிடிக்கும் தொழிலுக்காக அந்தமான் சென்றனர். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மீன் பிடிக்கும் வேலை செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் விசைப் படகில் சென்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மியான்மர் கப்பல்படையினா், மீனவர்கள் எல்லை தாண்டிவந்து, தங்களுடைய கடல் எல்கையில் மீன் பிடித்ததாக கூறி, மீனவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அதோடு விசைப்படகு, மீன் பிடிக்கும் வலை போன்றவற்றையும் பறிமுதல் செய்து, அவர்கள் நாட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி மியான்மர் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மீனவர்களின் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு மியான்மர் சிறையிலிருக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதினார்.
அதன்பேரில் மியான்மர் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், மியான்மர் அரசிடம் பேசினர். அதன்பின்பு மீனவர்கள் 4 பேரும் கடந்த வாரம் மியான்மர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள் 4 பேரையும் டில்லிக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்பு டில்லியிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் மீனவர்கள் 4 பேரும் சென்னை வந்தனர்.
இதையும் படிங்க: தை 1 தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வெளியாகுமா?