சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி அன்பரசு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆனால் சொத்துக்காக அவரது மகனே கொலை செய்துவிட்டதாக கூறி அவரது மூத்த மகள் சுமதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,அவரது உடலை உடற்கூறாய்வு செய்யவேண்டும் எனவும் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், தனது அண்ணன் அருள் சொத்துக்காக தனது தந்தை அன்பரசுவை கொலை செய்ததாக சுமதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக தனது தந்தையை, அண்ணன் அருள் தனது வீட்டில் அடைத்து வைத்து யாரையும் பார்க்கவிடாமல் கொடுமைப்படுத்தியதாகவும், அவருக்கு தவறான மாத்திரைகளை கொடுத்ததால்தான் அன்பரசு இறந்ததாகவும் கூறினார். அதுமட்டுமின்றி அருள் தன்னை கொலை செய்துவிடுவான் என்று தந்தை அன்பரசு சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் கூறியதாகவும் குற்றம்சாட்டினார்.இது தொடர்பாக பூவிருந்தவல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.