2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்த தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்தது, பின்னர் எஸ்.வி. சேகர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகள், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு என நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி. சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்குத் தடை, முன்னிலையாக விலக்கு, வழக்கை ரத்துசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று (மார்ச் 30) நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்.வி. சேகர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதாடுகையில், “கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி, தேசப்பற்று தொடர்பான பதிவுகளை அவ்வப்போது அனுப்புபவர். அதைப் போலவே நினைத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 19இல் வேறொருவர் எழுதியதை, எஸ்.வி. சேகர் பார்வேர்டு மட்டுமே செய்துள்ளார்.
அதன் பிறகே அது பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து எனத் தெரியவந்தது. உடனடியாக ஏப்ரல் 20ஆம் தேதியே பதிவை நீக்கிவிட்டு, தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்திருந்தார்.
தனிமனித ஒழுக்கத்துடன் பெண்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார் எஸ்.வி. சேகர். பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய பிறகும், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதே விவகாரம் தொடர்பான புகார்களில் அம்பத்தூர் நீதிமன்ற வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கரூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெற்ற வழக்குகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்குத் தடைவிதித்துள்ளது” என்றார்.
பெண்கள் குறித்து அவதூறாகப் பதிவான கருத்தை எஸ்.வி. சேகர் பதிவிடவில்லை என்றாலும், அதை பார்வேர்டு செய்திருப்பதும் குற்றமே என்பதால், அவர் மீதான வழக்கை ரத்துசெய்யக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட பின்பு பேசிய நீதிபதி, ”முகநூலில் வந்த தகவலைப் படிக்காமல் பார்வேர்டு செய்துவிட்டேன் எனக் கூறுவதற்கு எஸ்.வி. சேகர் எழுதப் படிக்கத் தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் எனப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி முக்கியப் பிரமுகர் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்?” எனவும் கேள்வி எழுப்பினார்.
பின்னர் எஸ்.வி. சேகர் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுசெய்ய தடைவிதித்தும், நேரில் முன்னிலையாக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து காவல் துறை ஏப்ரல் 16ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: பரூக் அப்துல்லாவுக்கு கோவிட் பாதிப்பு