வழக்கறிஞர் ஆர். பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில், சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 168 இடங்களில் 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 2019ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசிதழில் 89 இடங்கள் பெண்களுக்கும், 79 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கபட்டுள்ளன. இரு பாலினத்தவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், அரசிதழில் பெண்களுக்குத் தவறாகக் கூடுதலாக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதைச் சரிசெய்ய கோரி கடந்த 13ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.
ஆனால் மனு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் கௌதம் என்பவர் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடுசெய்தார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நவம்பர் 29 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: பெண் நிர்வாகியை சந்தித்த விஜய்!