சென்னை: மின்சார வாகனங்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக ஊரடங்கு காலத்துக்குப் பின் அவற்றின் தேவை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மின்கலனால் (பேட்டரி) இயங்கும் மின்சார வாகனங்களுக்கான சாலை வரி 100 விழுக்காடு ரத்துசெய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலமாக மின்சார வாகனங்களுக்கான விலை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதெர் எனெர்ஜி, "மின்சார வாகனங்களுக்கான சாலை வரி ரத்து என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் சென்னை, கோவையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 6,900 ரூபாய்வரை வாகனங்களின் விலை குறையும். இதன்மூலம் மின்சார வாகன விற்பனை அதிகரிக்கும்" எனக் கூறியது.
வரி விலக்கு மூலம் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் என விற்பனை முகவர்களும் கருதுகின்றனர். இது குறித்து பேசிய சல்மான் என்ற முகவர், "கடந்த மூன்று மாதங்களாக மின்சார வாகன விற்பனை அதிகரித்துள்ளது. கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் வண்டியை வழங்க முடியவில்லை. அந்த அளவுக்கு புதிய ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது, மின்சார வாகனங்களுக்கான சலுகைகள் அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அதிக அளவில் மின்சார வாகனங்களுக்கு மாறிவருகின்றனர். மேலும், இது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என்பதாலும் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வரி விலக்கு மூலம் விற்பனை 30 முதல் 40 விழுக்காடு அதிகரிக்கும் என நம்புகிறோம்" என்று கூறினார்.
மற்றொரு மின்சார வாகன விற்பனையாளரான சுரேஷ், "பெட்ரோல் வண்டிகளுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறிவந்த நிலையில் தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒவ்வொரு வாகனங்களுக்கும் 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை விலை குறையும் என்பதால் விற்பனை உயரும். கரோனா பாதிப்புக்குப் பிறகு விற்பனை மெள்ள மெள்ள அதிகரித்துவருகிறது. பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மின் வாகனங்களைப் பயன்படுத்துவதால் 40 விழுக்காடுவரை செலவு குறைகிறது" என்று தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக மெக்கானிக்காக பணியாற்றிய சிவா என்பவர், தற்போது காற்று மாசு, ஒலி மாசு ஆகியவற்றை கருத்தில்கொண்டு மின்சார வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்.
பொது இடங்களில் சார்ஜிங் வசதி இல்லாதது மட்டுமே தற்போது மின்சார வாகனங்களை வாங்குவதில் சிக்கலாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். அதிகமான இடங்களில் மின்னேற்றும் நிலையங்கள் (charging point) எதிர்காலங்களில் திறக்கப்படுமேயானால் அதிகமான மின்சார வாகனங்களைப் பொதுமக்கள் பயன்படுத்த தொடங்குவார்கள்.
இதையும் படிங்க: 100% மாசற்ற சென்சென் மாநகரம் - மின்சார வாகனங்களால் நிகழ்ந்த புரட்சி