கரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கிவைத்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள நுண்ணுயிரியல் அறிஞர் ஹேமலதா வரதன், அட்லாண்டாவில் உள்ள விஜயகுமார் வேலு ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் உடன் இருந்தார். பின்னர் அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம், "இந்தக் காணொலி கலந்தாய்வு தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மனிதரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்று பரவும் நிலை இதுவரை இல்லை.
இதுபோன்று தொற்று பரவும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பியவர்.
அவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளார். வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களையும் காவல் துறை உதவியுடன் சோதனைச்சாவடிகளில் நிறுத்தி தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறோம்.
பொதுமக்கள் அதிகமாகக் கூட்டம் கூடக் கூடாது என்பதற்காகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியாக இருந்தாலும் அதில் அடங்கும். எனவே அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
பொதுமக்கள் வணிகர்கள் பாதிக்கப்படாத வகையிலும் அரசு செயல்பட வேண்டியுள்ளது. அதேநேரத்தில் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இது அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் என்பதால், இந்த நேரத்தில் எதிர்மறையான கருத்துகளுக்கும், அரசியலுக்கும் இடமில்லை என்பது எனது பணிவான கருத்தாக வைக்கிறேன்" என வேண்டுகோள்விடுத்தார்.
மேலும், நோய்த்தொற்று வந்து குணம் அடைந்தவர் மீண்டும் பெருந்தொற்று உள்ளவருடன் பழகினால் மீண்டும் கரோனா வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ’குடியுரிமை சட்டத்தை வைத்து எதிர் சித்தாந்தவாதிகளை பழி தீர்க்க பாஜக நினைக்கிறது’ - கரு. பழனியப்பன்