சென்னை வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலகத்தின் துணை பதிவாளர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி பதிவாளர் பெண் ஒருவர், அத்துறையின் பதிவாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் உட்புகார் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதில் விசாரணை முறையாகயில்லை என அப்பெண் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதனையேற்ற மகளிர் ஆணையம் புகார்தாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரித்து, துணை பதிவாளருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியது. இதற்கிடையில், ஏற்கனவே புவிசார் குறியீட்டுத் துறை பதிவாளர் அமைத்த விசாரணை குழுவைச் செல்லாது என அறிவிக்கக்கோரி அப்பெண் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், தமிழ்நாடு சமூக நலத்துறை அலுவலர் தலைமையில் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்துவிட்டதால், பதிவாளர் அமைத்த குழு சட்டவிரோதமானது என உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை எதிர்த்தும், சமூக நலத்துறை அமைத்த விசாரணைக் குழு நடவடிக்கையை எதிர்த்தும் துணை பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இருதப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, பணியின்போது வேலை வாங்குவதற்காகத் திட்டினார் என்ற குற்றச்சாட்டை பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவையும், சமூக நலத்துறை குழுவின் விசாரணை ரத்துசெய்தும் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் பொய்ப்புகார் அளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினர். பெண்களின் கண்ணியம், சுயமரியாதையைக் காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை, இப்படி தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குரூப் 1 தேர்வு முறைகேடு புகார் - மனுத்தாக்கல் செய்ய திமுகவுக்கு அனுமதி