சென்னை: நாடு முழுவதும் கரோனா காரணமாக பன்னாட்டு விமான சேவை மற்றும் உள்நாட்டு விமான சேவை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் முதல் அலை முடிந்த பின் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டு, படிப்படியாக உயர்த்தப்பட்டது. ஆனால் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழக்கமான பன்னாட்டு விமான சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பன்னாட்டு விமான சேவைகள் தொடக்கம்
ஆனால் கரோனா மூன்றாம் அலை, ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக விமான சேவை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கரோனா மூன்றாம் அலை மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று குறைந்து வழக்கமான சூழல் திரும்பியுள்ள நிலையில், வருகிற 27ஆம் தேதி முதல், பன்னாட்டு விமான சேவைகள் தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்தது.
இதற்கான ஆயத்தப் பணிகளில், விமான நிலைய ஆணைய அலுவலர்களும், விமான நிறுவனங்களும் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், பன்னாட்டு விமான சேவை தொடங்குவது குறித்து ஆலோசிக்க, நேற்று (மார்ச் 16) சென்னை விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில் ஆணையக அலுவலர்கள், குடியுரிமை, சுங்க இலாகா, மத்திய தொழில் பாதுகாப்பு துறை உள்பட அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
இது குறித்து விமான நிலைய அலுவலர்களிடம் கேட்ட போது, சென்னை விமான நிலையம், பன்னாட்டு விமான சேவையை தொடங்குவதற்கு எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இப்போது வந்தே பாரத் மற்றும் சிறப்பு விமானங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு பின் வழக்கமான பன்னாட்டு விமான சேவை துவங்க உள்ளதால் பயணிகளை கையாள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடியுரிமை அனுமதி உட்பட விரைவான சேவையை வழங்கவும், உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விமான நிறுவனங்களிடமும், ஆலோசனைகள், கருத்துக்கள் கோரப்பட்டது. பன்னாட்டு விமான சேவையின் போது பயணிகளுக்கு எந்த குறைபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக முன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும் சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் இந்தியாவிற்கான விமான டிக்கெட் முன் பதிவை தொடங்கவில்லை. சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பரவல் உள்ளதால் மே மாதத்திற்கு பின் சேவையை தொடங்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது" என்றனர்.