சென்னை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று (மே.4)அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இலங்கை மக்களின் துயரைத் துடைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழக்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோளின்படி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குப் பணம் வழங்குவோருக்கு உரிய வருமானவரி விலக்கு அளிக்கப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குகிறேன்.
மனிதாபிமான அடிப்படையில் நிவாரண நிதி வழங்க விரும்பும் காவல்துறையினர், அதிகாரிகள் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்தி மக்கள் தொடர்புத்துறை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனவே மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ, இசிஎஸ் மூலமாகவோ, காசோலை, வரைவு காசோலை மூலமாகவோ நிதியுதவி வழங்கலாம்" என குறிப்பிட்டுள்ளார்.