திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக்கேட்டு மிகுந்த துயருற்றேன்.
உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்குத்தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.