சென்னை: ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரிப்பால நரேஷ். இவர் ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் பி.ஏ தெலுங்கு முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று (ஜூன்.28) வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவன், தேர்வு முடித்து வீட்டுக்குச் செல்ல இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் காத்திருந்தார். பின்னர் சென்னை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளார்.
அப்போது ஆவடி ரயில் நிலையத்திற்கும் அண்ணனூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயிலிலிருந்து கால் தவறிக் கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து மின்சார ரயிலை நிறுத்தினர். அதன் பின்னர் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவன் ரிப்பால நரேஷை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.
அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.