சென்னை: இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை தலைமைச்செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப்பெற்று தகுதியான வேலைவாய்ப்பைப் பெறவும், தங்களது சமூகப்பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள இயலும் என்பதைக்கருத்தில் கொண்டு, பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes), தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும் எனவும்; இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களைத்தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!