சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த இளைஞர், கலையரசன். சற்று மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய சென்று இருந்தார். அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகே வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈவிலின் கோப்பைல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்த நிலையில் கலையரசன் வேலை மாற்றம் காரணமாக 2021ல் சென்னைக்குத் திரும்பினார். இருந்த போதிலும் முகநூல், வாட்ஸ்அப் சமூக வலைதள செயலி மூலம் இவர்களது காதல் தொடர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது பற்றி அவர்கள் இரண்டு பேரும் தங்களின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டனர். அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த காதல் ஜோடியினர், முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதுவும் தமிழர் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஈவிலின் கோப்பைல் விரும்பினார். இதையடுத்து சட்டரீதியாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணப்பதிவு செய்தனர். பின்னர் திருமணம் தமிழ் முறைப்படி கைலாய வாத்தியம் முழங்க, சென்னை அடுத்த ஆவடி திருமுல்லைவாயில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
தமிழ் கலாசாரப்படி மணமகன் பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், மணமகள் பட்டுசேலை, நகைகள் அணிந்தும் வந்து மணமேடையில் அமர்ந்து இருந்தனர். பிறகு வேத மந்திரங்கள் முழங்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் மணமகளின் பெற்றோர் திருமணத்திற்கு வர முடியாததால், அவர்களுக்கு முகநூல் மூலம் லைவ் வீடியோ காண்பிக்கப்பட்டது. அவர்கள் இணையதளம் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர். தேசம் கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளதைப் பார்த்து, அவர்களது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக தமிழ் முறைப்படி திருமணம் என்றால் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இரு குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து உறவினர்களுடன் திருமணத்தை நடத்தி மகிழ்வர். ஆனால் இவர்களுடைய காதல் ஒரு வித்தியாசமானது. ஈவிலின் கோப்பைல் தான் காதலித்தவர் மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தும் ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு, காதலுக்காக இவரை திருமணம் செய்து உள்ளார்.
இந்த திருமணத்திற்கு திருமண பெண் ஈவ்லின் பெற்றோர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்திய தேசம் வருவதற்கு விசா கிடைக்கவில்லை. ஆனால், காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்ணுக்கு மட்டும் விசா கொடுத்து விடுங்கள் என முயற்சி செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த திருமணத்தில் மாப்பிள்ளை, தங்களது சொந்தங்களுடன் கலந்து கொண்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு இங்கு யாரும் இல்லை என்று கவலைப்படாத அளவிற்கு மாப்பிள்ளையின் உறவினர்களே பெண்ணுக்கும் சொந்தம் எனக் கூறி, கடல் கடந்து வந்த பெண்ணிற்கு திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.