சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் தமிழ் பூங்கா தெருவில் வசித்து வருபவர் ஜீவானந்தம் (35). இவர் சேலையூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் சுதந்திர தினத்தன்று காலை அவரது வீட்டிலிருந்து ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.
பின்னர் இரண்டு நாள்கள் கழித்து ஜீவானந்தத்தின் வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதாக பக்கத்து வீட்டுக்காரர் ஜீவானந்தத்துக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தார். இதனையறிந்தவுடன் பதறி அடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு முன்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக தாம்பரம் காவல் துறையினர் வந்து ஜீவானந்தத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள், 8500 ரூபாய் பணம், புதிதாக பளபளவென்று இருந்த இரண்டு சில்வர் பாத்திரங்கள் மற்றும் 1 கிலோ கவரிங் நகையை தங்க நகைகள் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
![கொள்ளையடிக்கப்பட்ட வீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-accused-arrest-photos-script-7208368_20082020085757_2008f_1597894077_876.jpg)
மேலும் பழுதாக இருந்த சொக்கத் தங்கத்தை போலி தங்கம் என்று நினைத்து பீரோவில் விட்டுவிட்டு கவரிங் நகையை கொள்ளையன் திருடிச் சென்றதும் தெரியவந்தது. 18 சவரன் தங்க நகை பீரோவில் பத்திரமாக இருந்ததைப் பார்த்த ஜீவானந்தம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். பின்னர் தாம்பரம் காவல் துறையினர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள்
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வீடு முழுவதும் சோதனை செய்தனர். இறுதியில் கத்திரிக்கோலில் திருடனின் கைரேகை தெளிவாக சிக்கியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தாம்பரம் காவலர்கள், ஒரு கிலோ கவரிங் நகை மற்றும் பட்டுப் புடவைகள் திருடுயது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினார். அதில் கைரேகை நிபுணர்கள் சோதனையில் ஏற்கனவே வாகன திருட்டில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்துப்போனது. அதில் திருடியவர் மதுரவாயிலை சேர்ந்த செல்வா என்பது தெரியவந்தது.
பின்னர் செல்வாவை பிடிக்க புனித தோமையார் மலை காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின்பேரில் தாம்பரம் காவலர்கள் மதுரவாயிலுக்கு விரைந்தனர். அங்கு செல்வா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை கைது செய்தனர்.
பின்னர் தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்துக்கொண்டு விசாரணை செய்தனர். அதில், செல்வா கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடும் கெட்டிக்காரன் என்பதும், கடைசியாக வாகனத்தை திருடிய வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று சுதந்திர தினத்தன்று வெளி வந்ததும் தெரியவந்தது.
சிறையிலிருந்து வெளிவந்த இரண்டே நாள்களில் தனது புதிய முயற்சியாக வீடு புகுந்து கொள்ளையடிக்கும் திட்டத்தை செல்வா அரங்கேற்றினார். ஆனால் கவரிங் நகைக்கும் தங்க நகைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்ததால் புதிதாக இருந்த கவரிங் நகையை தங்க நகை என்று நினைத்துக் கொள்ளையடித்து சென்றார்.
மேலும் செல்வாவிடம் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடினால் குறைந்த அளவே பணம் கிடைப்பதாகவும், அதனால்தான் வீடு புகுந்து கொள்ளை அடித்ததாகவும் ஒப்புக்கொண்டார். பட்டுப்புடவையை திருடியது குறித்து கேட்டபோது, பட்டுப்புடவை அனைத்தும் புத்தம் புதிதாக இருந்தது. அதனால் தனது காதலிக்காக திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஜஸ்கிரீமில் விஷம்;குடும்பத்தை தீர்த்துக்கட்ட நினைத்த இளைஞன் - கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்