சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் வசித்துவருபவர் தொழிலதிபர் ரோசன் ரங்டா (31). இவர் நேற்று முன்தினம் (அக். 06) மதியம் 2 மணியளவில் தனது குடும்ப உறுப்பினர்களின் மதிய உணவுக்காக ஸ்விக்கியின் மூலமாக டோமினோசில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், ஸ்விக்கியின் டெலிவரி ஊழியர் பீட்சாவை கொண்டுவருவதற்குத் தாமதம் ஆகியுள்ளது. இதனால் ரோசன் ரங்டா டெலிவெரி ஊழியருக்கு போன்செய்து விரைந்து வரும்படி கூறியுள்ளார்.
ஆனால் டெலிவரி ஊழியர் வருவதில் மீண்டும் தாமதம் ஆகியுள்ளது. சுமார் 1 மணி நேரம் கழித்து பீட்சாவை டெலிவரி செய்வதற்காக டெலிவரி ஊழியர் வந்துள்ளார்.
பீட்சா டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் ரோசன் ரங்டா டெலிவரி ஊழியரிடம் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரைத் தாக்கியும் உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர் கீழே கிடந்த கல்லை எடுத்து ரோடன் ரங்டாவின் ஃபார்ச்சூனர் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஏறி வேகமாகச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரோசன் ரங்டா கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் டெலிவரி ஊழியரைத் தேடிவருகின்றனர்.