அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களை குறைவாக பணி அமர்த்திவிட்டு, அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதுபோல் போலியான கணக்குக் காட்டி பணத்தைக் கொள்ளை அடித்துவருவது அம்பலமாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 70 மருத்துவமனைகளில் 50 முதல் 100 கோடி ரூபாய்வரை ஊழல் நடைபெற்றுள்ளது என அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பாளர் வேலைகளை தனியார் நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி டெண்டர் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவின் நெருங்கிய உறவினரின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவமனைகளில் நடக்கும் இந்த ஊழல், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்றுவருகிறது. இதற்கு மேலாவது லஞ்ச ஒழிப்புத்துறை விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு உடந்தையாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.