தமிழ்நாட்டில் பண்டிகை நாள்களின்போது அரசு அலுவலகங்களில் பரிசுத் தொகை, பொருள்கள் லஞ்சமாக வழங்கப்படுகிறது. இதனைத் தடுக்கும்வகையில் ஒவ்வொரு பண்டிகை நாளுக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகை, பொருள்கள் அரசு அலுவலகங்களில் அலுவலர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது.
இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை பத்திரப்பதிவு, மின்சார அலுவலகம் என மொத்தம் 54 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த அலுவலகங்களில் நடத்திய சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத பணம் நான்கு கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 892 ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் அரசு அலுவலர்களுக்குப் பரிசாகவும், லஞ்சமாகவும் வந்த 519 சவரன் தங்க நகையையும், 6.5 கிலோ வெள்ளியையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் பணிகளைச் செய்வதற்காகப் பொதுமக்களிடம் லஞ்சமாக அரசு அலுவலர்கள் பெறுவதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொறிவைத்து 16 அரசு அலுவலர்களைக் கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தச் சோதனையானது தொடர்ந்து நடைபெறும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...பிரபல ஐடி நிறுவனத்தில் வருமான வரி சோதனை: சுமார் ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு