சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்து ஓடிடியில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியின் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.
இது குறித்து நடிகர் பசுபதி அறிக்கை வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அதில், " தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும், பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
தான் எடுத்து கொண்ட கதையை சொல், செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா. ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.
என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் மற்றும் K9 ஸ்டுடியோவுக்கும் எனது நன்றிகள். ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' வெளியாகும் தேதி அறிவிப்பு!