சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 33 ஆயிரத்து 316 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 2,315 நபர்களுக்கும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவருக்கும் என 2,316 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 6 கோடியே 64 லட்சத்து 96 ஆயிரத்து 381 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 35 லட்சத்து 17 ஆயிரத்து 777 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டன. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,458 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 62 ஆயிரத்து 662 என உயர்ந்து உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 52 வயது முதியோர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
சென்னையில் 240 பேருக்கும் செங்கல்பட்டில் 437 பேருக்கும் கோயம்புத்தூரில் 120 பேருக்கும் திருவள்ளூரில் 139 பேருக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் பரிசோதனை செய்பவர்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 6.8 சதவீதமாக உள்ளது.
இதையும் படிங்க:200 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன - மத்திய சுகாதாரத்துறை!