மதுரை: திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோவில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த மலையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகின்றன.
திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். இந்த மலையின் ஒரே இடத்தில் பாறையில் சுமார் ஒரு அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமண குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது.
இந்த சட்டவிரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மதநல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, இந்த மலையை மீட்டெடுத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும்." என்று ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி தமது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
"திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, அரசு யாரிடமும் மதபாகுபாட்டை காட்ட விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே விரும்புகிறது" என்று அரசு தரப்பிவ் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அணைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.