இது குறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில்; "108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 4500க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு, சம்பளத்தில் 20 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, 108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தும் தனியார் நிறுவனமான ஜி.வி.கே. எம்.ஆர்.ஐ நிறுவனத்திடம் மனு அளித்தோம்.
ஆனால் நிர்வாகம் தன்னிச்சையாக 15 விழுக்காடு ஊதிய உயர்வை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதாக தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் பிரச்னையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவ சேவைகள், மாநில திட்ட இயக்குனர் தீர்க்க வேண்டும். எனவே எங்கள் கோரிக்கையை மாநில திட்ட இயக்குனரிடம் தெரிவிக்கவந்துள்ளோம். ஒருவேளை, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றார்.