சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேஜஸ் அதிவிரைவு ரயில் (Tejas Express train) தொடங்கப்பட்டது. இந்த ரயிலானது சென்னை புறநகரில் வழியாக சென்று திருச்சி சந்திப்பில் மட்டுமே நின்று செல்லும். ஆனால், தாம்பரம் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை ஏற்ற மத்திய ரயில்வே துறை, இன்று (பிப்.26) முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிக்கை வெளியிட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நிகராகக் கருதப்படுவது தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அதிகளவில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், இன்று முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் இன்று முதல் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டதற்கு பொதுமக்களும், ரயில் பயணிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த தேஜஸ் அதிவிரைவு ரயில் சென்னை புறநகர் வழியாக திருச்சி சந்திப்புக்கு 10.15 மணி அளவிலும் மதுரைக்கு 12.15 மணியளவிலும் சென்றடைகிறது. மாலை 3 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் அதிவிரைவு ரயில் சரியாக 9.15 மணி அளவில் எழும்பூர் நிலையத்திற்கு மீண்டும் வந்தடைகிறது.
வாரத்தில் சுழற்சி முறையாக ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், வியாழக்கிழமை அன்று மட்டும் இயங்காது என தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 'தாம்பரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள புறநகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே துறை இதனை நிறைவேற்றியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் மட்டும் ரூ.170 கோடியில் யார்டு மாற்றியமைத்தல், ரூ.50 கோடியில் ரயில் பெட்டி பராமரிப்பு டிப்போ மேம்பாடு, சென்னை எழும்பூர் போல் உலகத்தரத்தில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் மறு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.
மேலும், இந்தாண்டு ரயில்வே துறை பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் (Amrit Bharat Scheme) சென்னை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் மற்றும் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாமக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட 73 ரயில் நிலையங்கள் வருகிற 2024 மே மாதத்திற்குள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளது. மாமல்லபுரம் வழியாக சென்னை முதல் கடலூர் வரை, மதுரை முதல் தூத்துக்குடி வரை, ஸ்ரீபெரும்புதூர் முதல் கூடுவாஞ்சேரி வரை உட்பட 9 புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது'எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறியதாவது, 'நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான முதல் அனுப்பிய கடிதமே இந்த ரயில் நிற்க வேண்டும் என்பது தான். அந்தத் தொடர் முயற்சியால் தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் இன்று நின்று செல்கிறது.
மேலும், தாம்பரம் ரயில் நிலையம் அல்ல; இது முனையம். இங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் கூட இதனை ரயில் நிலையம் என்கின்றனர். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் முறையாக விழா ஏற்பாடு செய்யவில்லை. இருட்டில் பேச சில நிமிடங்கள் வாய்ப்பு கொடுத்தனர்’ எனக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் குறைந்தால் இதைச் செய்யுங்க.. சூப்பர் டிப்ஸ்!