அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச், ஃபிரான்ஸ் வீரர் லூக்கா புயிலை எதிர்கொண்டார்.
இருவரும் முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மோதியபோது ஜோகோவிச், லூக்கா புயிலை வீழ்த்தியிருந்தார். எனவே இன்றைய போட்டியில் லூக்கா அதற்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்கிய போட்டியில் ஜோகோவிச்சிற்கு இணையாக ஃபிரான்ஸ் வீரர் லூக்காவும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. ஆனால் ஜோகோவிச் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றார். ஜோகோவிச் கடைசியாக ஆடிய 16 போட்டிகளில் 15இல் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ், சக நாட்டு வீரர் ஆண்ட்ரே ருப்லெவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச், டேனில் மெட்வதேவை எதிர்கொள்கிறார்.