2019-ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்.
இப்போட்டியில் இவர் 251.7 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் இவர் தங்கம் வென்றதன் மூலம் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் இந்தியாவின் அபூர்வி சாந்தலா, அஞ்சலி பகவத் ஆகியோர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.