பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் சர்வதேச அளவிலான ஃபென்சிங் (வாள்வீச்சு) தொடர் நடைபெற்றது. இதில், டர்னாய் சேட்டிலைட் போட்டியில், மகளிர் தனிநபர் சேபர் பிரிவின் இறுதிச் சுற்றில், சென்னையை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி, அசர்பைஜானின் அன்னாபாஸ்தாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பவானி தேவி 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்ததால், இவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம், உலக அளவிலான தரவரிசைப் பட்டியலில் அவர் 23 இடங்கள் முன்னேறி 43ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச அளவில் கிடைத்த இந்த வெற்றி எனது தன்நம்பிக்கையை அதிகரித்துள்ளது என வெள்ளிப் பதக்கம் வென்றப் பின் பவானி தேவி தெரிவித்தார். சர்வதேச அளவில் அசத்திவரும் இவர், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவாரா என்பதை பொருத்திருந்துப் பார்ப்போம்.