10 அணிகள் இடையிலான 6ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (நவ.28) இரவு நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி - ஒடிசா எப்.சி. அணியுடன் மோதுகிறது.
இந்த சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சென்னையின் எஃப்சி அணி பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்கள் எல்லாம் துவண்டு போயிருந்த நிலையில், கடந்த போட்டியில் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை அணி 2 -1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியைப் பெற்று புள்ளிக்கணக்கை தொடங்கியது.
இந்த வெற்றியின் மூலம் ஒரு இடம் முன்னேறி 9ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று ஒடிசாவிற்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்திலும் வெற்றியை தொடர, சென்னை அணி முனைப்பு காட்டும் என எதிர்பாக்கப்படுகிறது.
சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த போட்டியானது நடைபெற இருப்பதால், சென்னை ரசிகர்களை திருப்திப்படுத்த, போட்டியில் வெற்றிபெற வேண்டும் என சென்னையின் எஃப்சி அணி கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளது.
ஒடிசா அணியை பொறுத்தவரை புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. நடப்புத் தொடரில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, இரண்டு தோல்வியை பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள சூழ்நிலையில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க: இரண்டாவது முறையாக ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்!