இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை நான்கு மணிக்கு சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின், இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஹைதராபாத் அணியை பொறுத்த வரையில், வார்னர், பேயர்ஸ்டோவ் இவ்விரு வீரர்களே அணிக்கு தேவையான ரன்களை அடித்து வருகின்றனர். அதுபோக, ரஷித் கான், முகமது நபி, சந்தீப் ஷர்மா ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருவது அந்த அணியின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
மறுமுனையில், மும்பை அணி விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவிலும் அசத்தக் கூடிய வீரர்கள் இருந்தாலும் பும்ரா, மலிங்கா, இவர்களது பந்துவீச்சை நம்பியே அந்த அணி உள்ளது.
அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு முறையும் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி அந்த அணிக்கு போதுமான ரன்களை வழங்கி வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியதில், ஹைதராபாத் அணி 7 போட்டிகளிலும், மும்பை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஹைதராபாத் அணியில் வார்னர், பேயர்ஸ்டோவ் இவ்விரு பேட்ஸ்மேன்கள், பும்ரா, மலிங்கா ஆகியோரின் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்விரு அணிகளும் முதலில் பேட்டிங் செய்து, அடித்த ரன்களை எதிரணிகள் அடிக்காமல் கட்டுபடுத்துவதில் வல்லவர்கள் என்பதால், ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலில் உள்ளனர். இப்போட்டி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.