கிரிக்கெட் போட்டிகளில் இவர் கமெண்டரி செய்கிறார் என்றாலே பெரும்பாலான ரசிகர்கள் டிவி, செல்போன்களை மியூட் செய்துவிடுவார்கள். தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்றும், மற்ற வீரர்களை மட்டம் தட்டியும் பேசும் அந்த வர்ணனையாளர் வேறு யாருமில்லை சஞ்சய் மஞ்சரேக்கர்தான். வர்ணனையின்போது மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதாக இவர் மீது ரசிகர்கள் பலமுறை குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ஜடேஜாவை 'bits and pieces' (எதுக்கும் உதவாதா வீரர்) வீரர் என விமர்சித்திருந்தார். பின் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜடேஜாவின் ஆட்டத்திறனைக் கண்டு தனது கருத்தை மஞ்சேரக்கர் வாபஸ் பெற்றுகொண்டார். அதேபோல, வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டியின்போது இவருக்கும் சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிற்கும் விவாதம் ஏற்பட்டது.
அப்போது இருட்டில் விளையாடும்போது வங்கதேச வீரர்களுக்கு பந்து நன்றாகத் தெரிகிறதா என்பதைக் கேட்க வேண்டும் என ஹர்ஷா போக்லே தெரிவித்திருந்தார். அதற்கு சஞ்சய் மஞ்சரேக்கர், ”கிரிக்கெட் விளையாடிய அனுபவம் எனக்கு இருப்பதால் இதைப் பற்றி கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என ஹர்ஷா போக்லேவே மட்டம் தட்டும் வகையில் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், தர்மசாலாவில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது. இப்போட்டிக்கான வர்ணனைக் குழுவில் இவரது பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், பிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்தும் சஞ்சய் மஞ்சரேக்கர் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
அதனால், அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலும் இவர் வர்ணனையில் ஈடுபட மாட்டார் எனத் தெரிகிறது. எனினும், பிசிசிஐ தரப்பிடமிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 54 வயதான இவர் இந்திய அணிக்காக 1987 முதல் 1996 வரை 37 டெஸ்ட், 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கமெண்ட்ரி கடவுள் ஹா்ஷா போக்லே