முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் சமீபத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா, ராகுல் டிராவிட் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரின் இந்தியா சிமெண்ட்ஸ் குழுவின் துணைத் தலைவர் பதவியிலும் இருப்பது பிசிசிஐ விதிகளை மீறுவதாக கூறி புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து பிசிசிஐ ஒழுங்குமுறை அதிகாரி டிகே ஜெயினிடம் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு, ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பிசிசிஐயின் நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின்னர் பேசிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் ரவி தோட்கே, ராகுல் டிராவிட் விவகாரத்தில் இரட்டை ஆதாய முரண்பாடுகள் இல்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக அவரை நியமிக்க பிசிசிஐ ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதில் இரட்டை ஆதாய பிரச்னை இருப்பதாக பிசிசிஐ ஒழுங்குமுறை அதிகாரி கருதினால் நாங்கள் அதற்கான விளக்கத்தை அளிப்போம் என்றார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினராக இருந்தபோது, அவர்கள் மீதும் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா இதே போன்று புகார் அளித்திருந்தார்.