கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது மீண்டும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
அதேசமயம் இந்த ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் அடங்கிய தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான தற்காலிக அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள்ளும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருநாள் போட்டிகள் அனைத்தும் பிரிஸ்பேன் மைதானத்திலும், டி20 போட்டிகள் அனைத்தும் அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி பகல் - இரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதியும், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி (டிச.26 - டிச.30) மெல்போர்ன் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் (ஜன.07 - ஜன.11) சிட்னியிலும், நான்காவது டெஸ்ட் (ஜன.15 - ஜன.20) பிரிஸ்பேன் மைதானத்திலும் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்திற்கு அபராதம்!