புதுமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம் 'வீரப்பனின் கஜானா'. இந்தப் படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், "காட்டிற்கும் மனிதனுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில்தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது.
இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை ஃபேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம்தான் 'வீரப்பனின் கஜானா'.
தமிழ்நாட்டில் காடு என்றால் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும்தான். ஆகையால், அதை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது. காட்டின் காவலனான வீரப்பன் தொடர்பான காட்சிகள் படத்தில் முக்கியமானதாக இருக்கும். குரங்கு, புலி, யானை என படம் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன" என்றனர்.
ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு 'ராட்சசி' இயக்குநர் சை.கௌதம்ராஜ், தயாரிப்பாளர் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து கதை எழுதியுள்ளனர். இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரையரங்கில் 'வீரப்பனின் கஜானா' படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.