'பிகில்' திரைப்படத்தை முன்னிட்டு கட்வுட், பேனர், ஃப்ளக்ஸ் வைப்பதற்குப் பதிலாக சிசிடிவி கேமராக்களை விஜய் நற்பணி இயக்கத்தினர் பொருத்திக் கொடுத்துள்ளனர்.
நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனையடுத்து திருநெல்வேலி விஜய் நற்பணி இயக்கத்தினர் பேனர் கலசாரத்தை தவிர்த்து நான்கு இடங்களில் 12 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ’நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'பிகில்' திரைப்படத்தை முன்னிட்டு, கட்அவுட், ஃப்ளக்ஸ் பேனர் வைப்பதற்குப் பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர்.
![arjun saravanan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4832925_fb.jpg)
காவல்துறை ஆலோசனை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 CCTV மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்தனர்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க: பிகில் ட்ரைலரை பார்த்து சிலிர்த்து விட்டேன்... பிரபல பைக் ரேஸர்