சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் அமைப்பைப் பதிவு செய்தார்.
அதன் தலைவராக இயக்குநர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்பட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
பெயரை பயன்படுத்த தடைகோரி வழக்கு
இந்நிலையில் தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களைப் பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நடிகர் சி. ஜோஷப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஏ. சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 2021 பிப்ரவரி 28ஆம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் நிர்வாகிகள் பலர் தங்களது பொறுப்புகள், அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது அனைவரும் விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது புகழைப் பயன்படுத்தி அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம், நடிகர் விஜய் தொடர்ந்து பேசாமல் இருந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ’அரண்மனை 3’ ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு