சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் அருண் அலெக்ஸாண்டர் (48). இவர் டப்பிங் கலைஞராகப் பணியாற்றிவந்தார். 2016ஆம் ஆண்டிலிருந்து படங்களில் நடித்துவந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி உள்பட பல படங்களில் அருண் அலெக்ஸாண்டர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 28) வடபழனியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவரது இழப்பு நடிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்குத் திரையுலகினரும், டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவர் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.