கேரள கவிஞர் ’ஓஎன்வி’ நினைவாக ஆண்டுதோறும் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஓஎன்வி விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதன்முதலாக கேரளாவைச் சாராத ஒரு நபருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட 18 பெண்கள் பாலியல் அத்துமீறல் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு இந்த விருது வழங்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை பார்வதி, "ஓஎன்வி மலையாளிகளின் பெருமை, அவரது கவிதைகளும் எழுத்துக்களும் ஈடு செய்ய முடியாதவை. அவரது படைப்புகள் நமது உடலுக்கும் மனதுக்கும் மிகப்பெரிய ஊக்க சக்தியாக இருக்கிறது. இத்தகைய பெரும் மனிதரின் பெயரிலான விருதை பாலியல் புகார் சாட்டப்படுள்ள வைரமுத்துவுக்கு கொடுத்துள்ளது மிகப்பெரிய அவமரியாதை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
”ஓஎன்வி என்றால் அறிவாற்றல். இப்படிப்பட்ட ஒரு உயரிய விருதை 17 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருக்கும் நபருக்கு வழங்கியுள்ளது அபத்தமானது” என மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது போன்ற பண்புகளை தான் ஓஎம்வி அகாதமி பாராட்டுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸும் வைரமுத்துவுக்கு விருது வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக திராவிட இயக்க ஆதரவாளர்கள் பலரும் இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என விமர்சித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து மீது விமர்சனங்களை முன்வைத்து, ’மீ டூ’ விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் சின்மயி, டுவிட்டரில், வைரமுத்துவுக்கு விருது வழங்கியுள்ளதையும், இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளதையும் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் இதனை விமர்சிப்பதால் திமுக ஆதரவாளர்கள் சிலர் தன் மீது தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.