நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்துள்ள படம் 'காஞ்சனா-3'. இப்படத்தில் ஜோடியாக ஓவியா, வேதிகா ஆகியோரும், கோவை சரளா, திவ்யதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஹாரர் காமெடி படமான காஞ்சனா-3, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு ரசிகர் ஒருவர் தன் உடலில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி நடிகர் ராகவா லாரன்ஸின் பேனருக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்யும் காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியுள்ளதாவது,
அன்பான ரசிகர்களுக்கு ஒரு எளிய வேண்டுகோள். ரசிகர் ஒருவர் கிரேனில் தொங்கியபடி என்னுடைய பேனருக்கு பாலாபிஷேகம் செய்யும் காட்சியை நான் பார்த்தேன். அந்தக் காட்சியை பார்த்த பிறகு மிகவும் மனம் வருத்தம் அடைந்தேன். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் உயிர் மற்றும் வாழ்க்கையை ஆபத்தில் வைத்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இப்படி செய்து நீங்கள் அன்பைக் காட்ட வேண்டாம்.
என்னுடைய ரசிகன் நீ என்று நிரூபிக்க விரும்பினால், ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். ஏராளமான முதியவர்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவினால் மகிழ்ச்சியும் பெருமையும் எனக்கு அளிக்கும்.
உங்கள் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. இதுபோன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபட வேண்டாம். இது எனது முக்கியமான வேண்டுகோள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள், என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.