அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. பல நட்சத்திரப் பட்டாளங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்ரீவல்லி, ஊ சொல்றியா மாமா, சாமி சாமி ஆகிய பாடல்கள் இந்திய இசை உலகையே திரும்பிப் பார்க்கவைத்தன.
இப்பாடல்கள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ரீல்கள், பார்வைகள், விருப்பங்களைப் பெற்று சாதனை படைத்துவருகிறது.
இது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், “புஷ்பா – தி ரைஸ் என் இசைப் பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில் எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார், அல்லு அர்ஜுன், மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி.
பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை ஆகிய அனைத்தும்தான் இந்த வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது.
எனது இசைக்காக அன்பையும், ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக, ரசிகர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என நம்புகிறேன்” என்றார்.
தற்போது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பாலிவுட்டில் உள்ள பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க: இன்றுமுதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி