பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேஷன், மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘சண்டக்காரி’. மாதேஷ் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் விமல், நடிகை ஸ்ரேயா, பிரபு, சத்யன், கே.ஆர். விஜயா, ரேகா, உமா பத்மநாபன், தேவேந்தர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றுவருகிறது. கதைப்படி ஸ்ரேயா மென்பொருள் நிறுவனத்தின் உயர் அலுவலராக நடிக்கிறார். விமல், ஸ்ரேயாவின் நிறுவனத்தில் பொறியாளராக நடிக்கிறார், படத்திற்காக லண்டனில் உள்ள மிகப்பெரிய விமான நிலையமான ஸ்டேன்போர்ட்டில் விமல், ஸ்ரேயா, சத்யன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமைப் பகுதியை ஸ்ரேயா தாண்டிச் சென்றார். உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய லண்டன் காவல் துறையினர ஸ்ரேயாவை சூழ்ந்துகொண்டனர். எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமைப் பகுதியைத் தாண்டிவந்தார் எனக் காவல் துறையினர் கேள்வி எழுப்பினர் .
இந்நிலையில் நடிகர் விமல் விபரீதத்தை உணர்ந்து தன்னிடமிருந்த உரிய ஆவணங்களைக் காட்டி படப்பிடிப்பிற்காக வந்திருப்பதாக விளக்கினார். பின்பு காவல் துறையினர் ஸ்ரேயாவை அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க : 'தலைவர் 168' சீக்ரெட்டை போட்டு உடைத்த மீனா!