டெல்லி: 'சப்பாக்'படத்துக்காக தனது பங்களிப்பை அளித்திருக்கும் வழக்கறிஞர் அபர்ணா பட்டுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிட் வீச்சுக்கு பாதிப்புக்குள்ளான லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'சப்பாக்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் தீபிகா படுகோனே பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்பு கதை தொடர்பாக பங்களிப்பு வழங்கிய தனக்கு அங்கீகாரம் வழங்காததால் ரிலீஸை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் அபர்ணா பட் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பங்கஜ், 'சப்பாக்' படத்தின் ரிலீஸின்போது படத்துக்காக பங்களிப்பு வழங்கிய மனுதாரருக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழுவினர்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த விவகாரம் குறித்து அபர்ணா பட் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக் கூறியதாவது:
படத்துக்கு தேவையான தகவல்கள், பங்களிப்பை பெற்றுக்கொண்டு அதற்கு உரிய அங்கீகாரம் அளிப்பதாக வாக்களித்துவிட்டு அதை செயல்படுத்தாமல் இருப்பது தவறு. எங்களுக்கு பணம் முக்கியமில்லை என்றார்.
முன்னதாக, படத்தின் ரிலீஸை தடை செய்யக்கோரி லட்சுமி அகர்வால் ஆசிட் வீச்சு வழக்கில் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் அபர்ணா பட் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளபக்கத்திலும் கருத்து பதிவிட்டார். அபர்ணா பட்டுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது 'சப்பாக்' படத்தில் அவரது பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.