சீன நிறுவனமான சியோமி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாகத் திகழ்கிறது. ரெட்மி, எம்.ஐ, போக்கோ ஆகியவற்றை உள்ளடக்கிய சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் 30 சதவிகிதத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
என்னதான் சீனாவைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், சியோமி தனது உற்பத்தியில் பெரும்பாலானவற்றை இந்தியாவில் தான் மேற்கொள்கிறது. இதன் மூலம் வரிகளும் தவிர்க்கப்படுவதால், குறைந்த விலையில் மொபைல்களை சியோமியால் விற்பனை செய்ய முடிகிறது.
இந்நிலையில், சியோமி இந்தியாவின் முதன்மை இயக்க அலுவலர் முரளி கிருஷ்ணன் கூறுகையில், "சியோமி இந்தியாவில் விற்கும் 99 சதவிகித மொபைல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை. இங்கு நாங்கள் நொடிக்கு மூன்று மொபைல்கள் தயாரித்து வருகிறோம்.
மேலும், இந்தியாவில் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதி செய்கிறோம். மத்திய அரசு இதில் போதிய ஊக்கத்தொகையை அளித்தால், அதிக அளவில் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் மொபைல்களை ஏற்றுமதி செய்யத் தயாராகவே உள்ளோம்.
இந்தியாவில் வழங்கப்படும் பிஎஸ்ஐ சான்றிதழ் சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்கப்படுவதில்லை. அரசு பிஎஸ்ஐ சான்றிதழை சர்வதேச அளவில் ஏற்கும் ஒன்றாக மாற்றினால், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்" என்றார்.
மேக் இந்தியா திட்டத்துக்குக் கிடைக்கும் ஊக்கத்தொகையும் சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட காப்பரேட் வரியும் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் முரளி கிருஷ்ணன் கூறினார்.
சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்கள் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியிலும் தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரிலும் தயாரிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: 'ரியல்மி மொபைல் வாங்குங்க' - ஐபோன் மூலம் ட்வீட் செய்த ரியல்மி சிஇஓ!